நாவல்
ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடலே இந்நாவல். உலகமயமாக்கலின் விளைவாகப் பாரம்பரிய விதைகள் பறிபோய், மரபணு நீக்கப்பட்ட விதைகள் வந்ததன் பொருட்டு, சமகால விவசாயிக்கு உண்டாகும் நிலம் சார்ந்த வலியை, பிரிட்டிஷ் காலம், சோழர் காலம், ஆதிக் காலம் எனப் பின்னோக்கிப் பார்த்து, பறிபோன நிலம் பற்றிய விரிவான வரலாற்றுப் புனைவு இது. ஆரியப் படையெடுப்பால் நிலத்தினின்று வெளியேற்றப்பட்ட தொல்குடிகள், சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம், அகரம், அக்ரஹாரம் எனக் கிராமம் கிராமமாகப் பறிகொடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள், பிரிட்டிஷ் காலத்தில் பார்ப்பனருக்கு ஒடுக்கப்பட்டோரின் நிலங்கள் கைமாற்றப்பட்ட கதையாடல் இவை பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியவாதிகள் இராஜராஜசோழனைத் தமிழரின் சிறப்பான ஆட்சிமுறைக்கு முன்னுதாரணமாகச் சொல்லி வரும் வேளையில், உழுகுடிகளின்மீது 400க்கும் மேற்பட்ட வரிவிதிப்பு, பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்த நிலங்களுக்கு எவ்வித வரியுமில்லை என்பதைத் தரவுகளுடன் பேசுகிறது நாவல். பெண்களைக் கோயில்களுக்கு அடிமையாக்கியது, பிராமண போஜனத்திற்கு நிலதானம் கொடுத்தது, திருநந்தா விளக்கெரிக்க நெய் வேண்டி இடையர்களுக்கு நெருக்கடி தந்தது, தேவரடியாள்களின் துயரங்கள், உள்ளாலை, புறம்படி, பறைச்சேரி, புலைப்பாடி என ஜாதிவாரியாக உருவாக்கப்பட்ட இருப்பிடம், குடவோலை முறை என்பது தமிழர்களுக்கானதல்ல; பிராமணர்களுக்கானது என்பதன் விரிவான விளக்கம்…எனப் பலவாக விரிகிறது பிரதி.